பாலக்கோடு, ஆக. 13-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள வரகூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சென்றாயபெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.வரகூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில் அஷ்டபந்தன விழாவையொட்டி நேற்று முன்தினம் கனபதி பூஜையுடன் புது விக்ரஹம் கரிகோல ஊர்வலம் ஆச்சார்ய அழைப்பு, பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், புண்யாகவாசனம் உள்ளிட்ட யாகங்கள் வளர்க்கப்பட்டது. அதனையடுத்து அக்னி ஆராதனம் செய்யப்பட்டு கும்ப பிரதிஷ்டை நடைபெற்றது. இதனையடுத்து அன்று மாலை நூதன விக்கிரஹம் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதலும், திருமஞ்சனம்,அபிஷேகம், யாகசாலை ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனையடுத்து விழாவின் முக்கிய நாளன நேற்று காலை கும்பத்திற்கு யாகசாலையில் பல்வேறு விதமான ஹோமங்கள் நடைபெற்றது. இதனையடுத்து யாகசாலையிலிருந்து கும்பத்தை பட்டாச்சார்யகள் தங்கள் தலை மீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கோயிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ சென்றாய பெருமாள் சுவாமிகளுக்கு பல்வேறு திரவிய அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சென்றாய பெருமாள், ஸ்ரீ பங்பஜவல்லி, ஸ்ரீ நீலோத்பலவல்லி ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவையொட்டி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாட்டை ஊர் பொது மக்கள் மற்றும் பாலக்கோடு ஜெய்சக்தி கல்வி குழுமம் நிறுவனர் பி.கே.சேகர் குடும்பத்தினர் செய்து இருந்தனர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.