கோயில் காளை திடீர் உயிரிழப்பு – மரியாதையுடன் அடக்கம் செய்த எதார்லபட்டி கிராம மக்கள் – இறந்ததை அறியாத ஜோடி காளை புதையண்ட இடத்தில் உண்ணாமல் படுத்திருப்பதை கண்டு கிராம மக்கள் கண்ணீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த எதார்லபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தாகவுண்டர். இவரது தந்தை அதே கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்துள்ளார். தந்தையின் இறப்புக்கு பிறகு மூத்த மகன் தங்கவேல் கோவில் தர்மகர்த்தாவாக பதிவேற்றார். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு முத்தாகவுண்டரின் வீட்டில் இருந்து பசு மாடு சினை கண்டுள்ளது. எந்த குட்டியை ஈன்றாலும் அதனை முத்துமாரியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்குவதாக அவரது சகோதாரும், தர்கர்த்தாவுமான தங்கவேலுவிடம் தெரிவித்துள்ளார். முத்தாகவுண்டரின் பசுமாடு காளை மாட்டை ஈன்றது. சொல்லியது போல் கோவிலுக்கு தானமாக அளித்துள்ளார். அன்றிலிருந்து அக்கிராமத்தில் செல்லப்பிள்ளைகாக மாறிவிட்டது அக்காளை. கிராம மக்கள் கொடுக்கும் உணவுகளை வாங்கிக்கொண்டு கிராமத்திலேயே வாழ்ந்து வந்துள்ளது. அதே சமயம் இதே வயதில் மற்றொரு காளை கன்றும் அதனுடன் சேர்ந்துகொண்டது. இவ்விரு காளைகளையும் கிராம மக்கள் அன்போடு கவனித்து வந்தனர். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரைத்திருவிழா நடக்கும்போது, இரு காளைகளுக்கும் வர்ணம் பூசி அலங்காரம் செய்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இணைப்பிரியா இவ்விரு காளைகளில் முத்தாகவுண்டர் அளித்த காளை நேற்று கோவில் அருகே உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளது. இதனை அறிந்த கிராம மக்கள் அக்காளையை நேற்று இரவு நல்லடக்கம் செய்தனர். இதனை அறியாத மற்றொரு காளை இன்று காலை இறந்த காளை புதைத்த இடத்தை மோப்பம் வைத்து கண்டுபிடித்துள்ளது. நண்பர் காளை இறந்ததை உணர்ந்துக்கொண்ட இந்த காளை அப்போது முதல் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. பெரும் சப்தத்துடன் நீண்ட நேரம் உறுமிக்கொண்டும், புதையுண்ட இடத்தை தனது காலால் பள்ளம் தோண்டி முயற்சித்ததை பார்த்த கிராம மக்கள் கண்ணீர் விட்டுள்ளனர். புதையுண்ட இடத்தில் யாரையும் நெருங்க விடாமல் துரத்தி வருகிறது. இன்று அதிகாலை முதல் அதே இடத்தில் படுத்து எதையும் உண்ணாமல் இருந்து வருவது கிராம மக்களை ஆச்சரியத்திலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.