கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் பரிதாநவாப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கிருஷ்ணகிரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை இன்று 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள் செலுத்துபவர்களுக்கு 5சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழக முதல் -அமைச்சருக்கு நகராட்சி மன்ற தலைவர் என்ற முறையிலும் நகராட்சி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ரூ.19 கோடியே 72லட்சம் தொகை நிலுவை இருந்தது. கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.13கோடியே 62லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் உரிய முறையில் சொத்து வரியை செலுத்தி உள்ளார்கள். இதற்காக நகராட்சி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணகிரி நகராட்சி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. நகராட்சி எல்லையில் நாள்தோறும் ஒன்றரை டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது. இது மக்கும் மக்காத பிளாஸ்டிக் என தரம் பிரித்து வருகிறோம். கிருஷ்ணகிரி பிளாஸ்டிக் இல்லாத நகரம் ஆக்கிட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார். அப்போது நகராட்சி ஆணையாளர் வசந்தி உடன் இருந்தார்.
கிருஷ்ணகிரியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நகராட்சியாக உருவாக்கிட வேண்டும்- நகராட்சி தலைவர் வேண்டுகோள்.
Add Comment