தமிழகத்தில் நுழைந்து போச்சம்பள்ளி அருகே இரு வேறு இடங்களில் பால் கொள்முதல் நிலையத்தை அமைத்த அமுல் – ஆவின் நிறுவனத்தை பாதிக்குமா?தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தட்டக்கல் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டுள்ள அமுல் பால் நிறுவனம் தனது பால் கொள்முதல் நிலையத்தை துவங்கியுள்ளது. அதேபோல் போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி கிராமத்திலும் பால் கொள்முதல் நிலையத்தை துவக்கியுள்ளது. துவக்கப்பட்ட 15 நாட்களில் தாதம்பட்டி கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 5000 லிட்டர் பாலும், தட்டக்கல் கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையத்தில் 2000 லிட்டர் பாலும் கொள்முதல் செய்யப்படுவதால், ஆவின் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்தைவிட லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1 முதல் ரூ.2 வரை அதிகம் விலை கொடுப்பதாக விவசாயிகள் அமுல் நிறுவனத்திற்கு அதிக அளவு பால் கொடுத்து வருகின்றனர். இங்கிருந்து பெறப்படும் பால் ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. இதேபோல் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும், அமுல் நிறுவனம் துவக்கப்பட்டால் ஆவின் நிறுவனத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான சிவகுரு தெரிவிக்கையில், வெளி மாநில வியாபாரிகள் தமிழகத்திற்குள் கால் பதித்து லிட்டருக்கு கூடுதல் ₹2 ரூபாய் கொடுப்பதால் விவசாயிகள் அவர்களிடம் பால் கொடுத்து வருகின்றனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் கொள்முதல் படிப்படியாக குறைந்து, நாளடையில் செயல்படாமல் போகும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசும், பால்வளத்துறை அமைச்சரும் அமுல் நிறுவனத்தை தமிழகத்திற்குள் நுழைய எப்படி அனுமதித்தனர். அமுல் நிறுவனம் கூடுதலாக லிட்டருக்கு ரூ.2 வரை கொடுக்கும்போது, ஆவின் நிறுவனத்தால் ஏன் கொடுக்க முடியவில்லை. மேலும் வரும் நாட்களில் அமுல் நிறுவனம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொள்முதல் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்குள்ளாக தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டுமென கூறினார்.இதுகுறித்து தமிழ்நாடு அமுல் நிறுவன தலைமை அதிகாரி மணிவேல் அவர்களிடம் கேட்டபோது, ஆவின் நிறுவன விலையை ஒத்தே அமுல் நிறுவன பால் விலையும் இருக்கும் என்பதால் ஆவின் நிறுவனத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.
தமிழகத்தில் நுழைந்து போச்சம்பள்ளி அருகே இரு வேறு இடங்களில் பால் கொள்முதல் நிலையத்தை அமைத்த அமுல் – ஆவின் நிறுவனத்தை பாதிக்குமா?
Add Comment