ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விலையேற்றம் – கிலோ ரூ.4க்கு விற்று வந்த முள்ளங்கி தற்போது ரூ.12க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான திருவயலூர், ஜம்புகுட்டப்பட்டி, எ.மோட்டூர், ஜிங்கல்கதிரம்பட்டி, பனங்காட்டூர், கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்து வரும் விவசாயிகள் முள்ளங்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.12க்கு எடுக்கப்படுவதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த இரு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. காரிமங்கலம், போச்சம்பள்ளி சிப்காட் ஆகிய பகுதிகளில் அதிக அளவு கன மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் விளைந்த முள்ளங்கி விலை நிலங்களிலேயே அழுகத்துவங்கின. இந்த முள்ளங்கி ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை என்பதால் வரத்து குறையத்துவங்கியது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான திருவயலூர், ஜம்புகுட்டப்பட்டி, எ.மோட்டூர், ஜிங்கல்கதிரம்பட்டி, பனங்காட்டூர், கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை காரணமாக முள்ளங்கி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.4க்கு விற்ற நிலையில் தற்போது கிலோ ரூ.12க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்று வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழை காரணமாக முள்ளங்கி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் விலையேற்றம் கண்டுள்ளதாக காரிமங்கலத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ராஜா தெரிவித்தார்.