கிருஷ்ணகிரியில் “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்”- திறப்பு விழா
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் கங்கலேரி, கட்டிநாயனப்பள்ளி, சோக்காடி, கல்லுகுறுக்கி, கட்டிகானப்பள்ளி, அகசிப்பள்ளி, பெத்தனப்பள்ளி, நாரலப்பள்ளி ஆகிய எட்டு பஞ்சாயத்துகளில் இன்றைய தினம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் காணொலி காட்சி மூலம் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் திறப்பு விழா ஒளிபரப்பு செய்யப்பட்டது.
காணொலி காட்சியில் முதல்வர் இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாக அனைத்து கிராமங்களும் தனது ஐந்தாண்டுகால ஆட்சியில் முழுமையாக தன்னிறைவு பெறவேண்டும் அதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும் ஒவ்வொரு நபரும் ஏதேனும் ஒரு திட்டத்திலாவது பயனடைய வேண்டும் என்றார். திட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கிய பின் பயனாளிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 2021-22 ம் ஆண்டிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு பஞ்சாயத்திற்கு 200 பண்ணை குடும்பங்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடும்பம் ஒன்றிற்கு மூன்று தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் வரப்பு பயிராக காரமணி பயிரிட 50 சதவிகித மானியத்தில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 75 கிலோ விதைகள், கைத்தெளிப்பான் 5 எண்கள், மின்கலத்தெளிப்பான் 4 எண்களும் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள், இடுபொருட்கள் குறித்து காட்சிபடுத்தப்பட்டது.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தோட்டக்கலை துறை மூலம் மாடித்தோட்ட கிட் 25 ரூபாய் மானியத்தில் 125 பேருக்கு வழங்கப்பட்டது. பழமரக்கன்றுகள் ஒரு நபருக்கு 8 செடிகள் என்ற விகிதத்தில் 6 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சாந்தி, கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள மேற்கண்ட கிராம பஞ்சாயத்துகளின் ஊராட்சித் தலைவர்கள் முக்கிய பிரதிநிகள், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் 950 க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் விவரங்களுக்கும் மேற்கண்ட திட்டங்களில் பயனடைவதற்கும் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவர்களை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.வி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.