தேன்கனிகோட்டை அருகே மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் பிக்கப் வேன் மோதி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கோட்டை வாசல் பகுதியில் வசித்து வந்தவர் சரவணன் (30) இவர் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு பிரபாவதி என்ற மனைவியும் இனியன் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர்.
சரவணனின் மனைவி பிரபாவதி கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சரவணன் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து சரவணன் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கெலமங்கலத்திலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கலுகோபசந்திரம் என்ற இடத்தில் அவர் சென்றபோது எதிரே வந்த பிக்அப் வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது
இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.