கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில் 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 120 நாட்களுக்கு முதல்போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ் ஆகியோர் இன்று (01.08.2022) திறந்து வைத்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 8,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 01.08.2022 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2082 ஏக்கர் என மொத்தம் 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடைகின்றன.
இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள, தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தப்பள்ளி மற்றும் மார்த்தாண்டப்பள்ளி ஆகிய 22 ஊராட்சிகளில் உள்ள 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவைகளை கருத்தில் கொண்டு, 120 நாட்களுக்கு சுழற்சி முறையில், முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும் அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும் 8 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும் (வலதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு:26 க.அடி/வினாடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு:62 க.அடி/வினாடி) என மொத்தம் BB கன அடி / வினாடி வீதம் திறந்து விடப்படும்.
அணையின் மொத்த நீர்மட்டம் 44.28 அடி, அணையின் முழு கொள்ளளவு 481 மி.க.அடி, அணையின் இன்றைய நீர்மட்டம் (01.08.2022) 42.15 அடி, அணையின் இன்றைய கொள்ளளவு 400.87 மி.க.அடி ஆகும்.
எனவே, விவசாய பெருமக்கள் விவசாயத்திற்கு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.தேன்மொழி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளம்) திரு.குமார், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் திரு.ஆனந்தய்யா, உதவி செயற்பொறியாளர் திரு.உதயகுமார், உதவி பொறியாளர்கள் திரு.பொன்னிவளவன், திருமதி.ராதிகா, வட்டாட்சியர் திரு.கவாஸ்கர், மாநகராட்சி கவுன்சிலர் திரு.சீனிவாசன், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சாந்தாவீரபத்திரப்பா, விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.