ஊத்தங்கரை-04 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏணிப்படிகள் விருது, பதக்கம், சான்றிதழ் போன்றன வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் செ.பெரியசாமி தலைமை தாங்கினார். அனைத்து வணிகர்கள் சங்க செயலாளர் ர.உமாபதி, ஆர்கே ஓட்டல் ராஜா, வழக்கறிஞர் த. பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ப. சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஏணிப்படிகள் விருது, பதக்கம், மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். ஏணிப்படிகள் விருது பெற்ற ஆசிரியர்கள் வளர்மதி, ராதாகிருஷ்ணன், நாகேஷ், ராணி, மகேஸ்வரி, தேன்மொழி, அல்தாஜ், சொக்கன், ரவி, கந்தசாமி, கல்யாணி, பாண்டுரங்கன், தாமரை, அனுசுயா, கண்ணம்மாள் ஆகியோரின் நீண்டகால கல்விப் பணியை பாராட்டி ஏணிப்படிகள் விருது வழங்கப்பட்டதாக ஆசிரியர் கணேசன் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாதப்பன், உதவி தலைமை ஆசிரியர் கண்ணதாசன், தலைமை ஆசிரியர்கள் ராஜேந்திரன், சாந்தி, தொண்டு நிறுவன நிர்வாகிகள் கிரேட் உமா மகேஸ்வரி, கார்டு ரூபி, லாவண்யா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கு.கணேசன் செய்திருந்தார்.