கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் போச்சம்பள்ளியில் 9 செ.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்ஆவல்நாயக்கம்பட்டி ஜம்புகுட்டப்பட்டி பாரூர், வாடமங்கலம், என்.தட்டக்கல், வேலம்பட்டி பாரூர் கீழ்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 50ற்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள நெற்பயிற்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். மேலும் பல ஏக்கரில் அதிகப்படியான தண்ணீர் தேங்குவதால் அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மழை நீரில் நெற்கதிற்கள் மூழ்கி இருப்பதால், மீண்டும் முளைக்கத்துவங்கியுள்ளன. வருவாய் இழப்பை சந்தித்து வரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.