கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் 5 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும் என தளி சட்டமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான டி. இராமச்சந்திரன் பொதுமக்களுடன் சேர்ந்து ஓசூர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குந்துக்கோட்டை, ஏணி பண்டா, ஈரி செட்டி ஏரி, குருபரப்பள்ளி, சாலிவாரம். திப்பசந்திரம், சந்தனப்பள்ளி, ஜவளகிரி, குடுமனதொட்டி, கொப்பக்கரை, தொட்டதிம்மனஹள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 தலைமுறைகளாக 80 ஆண்டுகளுக்கு மேல் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை பட்டாக்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் தனது சட்டமன்ற தொகுதி பொதுமக்களுடன் சேர்ந்து ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் சரண்யாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அப்போது பல ஆண்டுகளாக வீட்டுமனை இல்லாமல் வாழ்க்கை நடத்தி வரும் ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கு அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். வன நிலங்களில் 2005 ஆம் ஆண்டு வரை குடியிருந்து வரும் பொது மக்களுக்குவன உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்லாம் என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தீர்ப்பு கூறியுள்ளது.ஆகவே வன உரிமை சட்டம் 2006 இன் படி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 5 தலைமுறைகளுக்கு மேலாக பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என கேட்டுக்கொண்டார். இல்லையென்றால் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.