சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 289வது இடத்தை பிடித்து கிருஷ்ணகிரி மாணவி சாதனை – வறுமை ஒழிப்பு, கிராமபுற வளர்ச்சி மட்டுமே எனது இலக்கு என சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஹரினி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் ஐ.ஏ.எஸ். சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் இந்திய அளவில் 933 நபர்கள் தேர்ச்சி பெற்றனர். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த கருங்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி அவர்களின் மகள் ஹரினி (26) தேசிய அளவில் 289-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தந்தை ரவி விவசாயம் பார்த்து வரும் நிலையில், தாயார் கோமதி கெங்கிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ். ஆர்வம் கொண்டிருந்த ஹரினி, பொழுது போக்கு மற்றும் விளையாட்டுகளில் நாட்டமில்லாமல், தொடர்ந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி 12ம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கலகத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ். அகடமியில் தொடர்ந்து 4 வருடங்கள் முயற்சித்து 4வது முயற்சியில் தேர்ச்சி பெற்றார். இதற்கிடையே கடந்த ஆண்டு குரூப்-2ல் தேர்ச்சி பெற்று பாளையங்கோட்டையில் வேளாண்மை அலுவலராக பணியில் சேர்ந்துள்ளார். நான்காவது முயற்சியில் தேர்ச்சி பெற்றதையடுத்து, வெற்றிக்கான மகிழ்ச்சியில் அவர்களது குடும்பம் உள்ளது. இதுகுறித்து ஹரினி அவர்கள் பேசியபோது, சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 289-வது இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க, ஐ.ஏ.எஸ். பணியை தேர்தெடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். குழந்தை திருமணம் சகஜமாக நடைபெறும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 26 வயது வரை என்னை படிக்க வைத்த பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வருமை ஒழிப்பு, கிராமபுற வளர்ச்சி என்பது எனது இலக்காக உள்ளது என தெரிவித்தார். மேலும் பேருந்தே இல்லாத கிராமத்திலிருந்து மிக சிரமப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருப்பதாக கண் கலங்கினார்.