விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (26.05.2023) நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.05.2023) நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 28.04.2023 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து ஏரி, கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பட்டா வழங்குதல், நீர்வழிப்பாதைகளை சீரமைத்தல், பயிர்கடன், தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலப்பதை தடைசெய்தல், வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடை செய்தல், தோட்டக்கலைத்துறை சார்பாக நாற்றுகள் வழங்குவது, கால்நடைத்துறை சார்பாக கிளை கால்நடை மருந்தகம் துவக்குதல், விவசாய மின் இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பெறப்பட்ட 242 மனுக்கள் பெறப்பட்டு, 197 – மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளித்தனர்.இன்று (26.05.2023) நடைபெற்ற விவசாய குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து காவேரிப்பட்டணம், பையூர் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரம் வைத்துள்ள மாம்பழ கடைகள், சாலையில் இருந்து 20 அடி தூரம் தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஏக்கருக்கு, ரூ.25 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கி வருகின்றனர். இதே போல் யானை தாக்கி காயம் அடைபவர்களுக்கு ரூ.60 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. எனவே, பயிர் மற்றும் யானை தாக்கி படுகாயம் அடைபவர்களுக்கான இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும். யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் வகையில் சோலார் மின்வேலிகள் அமைக்க வேண்டும். மயில்கள், குரங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க வேண்டும்.தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் ஆழ்துளை கினாறுகளில் 700 அடிக்கு கீழ் தான் தண்ணீர் கிடைக்கிறது. சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளோம். 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொட்டு நீர்பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்குவதை, 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். நாராயணன்ராவ் ஏரி கரையை பலப்படுத்திட வேண்டும். விவசாயிகள், நுகர்வோர் பயன்பெறும் வகையில், காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வாரச்சந்தைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும். வாரிசு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் தாமதம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக தென்னை சார்ந்த அனைத்து பொருட்களின் விலையும் சரிந்து வருகிறது. தேங்காய் விலை ரூ.20 -ல் இருந்து ரூ.8 -க்கும், தென்னை நாற்றுக்கள் ரூ.100 -ல் இருந்து ரூ.10 -க்கும், தேங்காய் பூ விலை ரூ.40 -ல் இருந்து ரூ.10 -க்கும் சரிந்துள்ளது. எனவே, அரசு தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்யணம் செய்ய வேண்டும். அதன்படி தேங்காய் ரூ.25ம், தென்னை நாற்றுக்கு ரூ.160 -ம், கொப்பரைக்கு கூடுதல் விலையும் நிர்ணயம் செய்திட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். மா நர்சரிகளுக்கு மானியத்துடன் கூடிய கூட்டுறவு வங்கி கடன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 240 மனுக்கள் அளித்துள்ளனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க காவல்துறை மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு தொகை உயர்த்தி வழங்குவத அரசின் கொள்கை முடிவை சார்ந்தது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கொப்பரை தேங்காய்கள் அதிகப்பட்ச விலைக்கு, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. தென்னை சார்ந்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தென்னை ஆராய்ச்சி மையம் கோரி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தைகள், வாரச்சந்தைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதற்குள் சந்தைகளில் தொடர்புடைய அலுவலர்கள் அடிப்படை வசதிகள் மேம்படுத்திட வேண்டும். இல்லாவிட்டால், தொடர்புடைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாரச்சந்திரம் மற்றும் படேதலாவ் கால்வாயில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இக்கால்வாயில் அடைப்பு இடங்களில் உடனடியாக சரி செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.ராஜேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயனி இ.வ.ப., வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.பூபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.