போச்சம்பள்ளி அருகே குடிபோதையில் மளிகை கடைக்காரரிடம் தகராறு – தட்டிக்கேடவர்களின் கை கால்களை கடித்ததில் பல் உடைந்து விழுந்தது கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, குள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 49, தூயமணி, 33, இருவரும் நேற்று இரவு மது அருந்துவதற்கு சோடா வாங்க புதுமோட்டூர் பகுதியில் உள்ள சென்றாயன், 40, என்பவரது மளிகை கடைக்கு சென்றுள்ளனர். சில்லென்று சோடா இல்லை என கடைக்காரர் தெரிவித்ததை அடுத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த சென்றாயன் உறவினர்கள் முருகன், 57, குறளரசன், 27, நவீன்குமார், 27, மாணிக்கம், 42, ஆகியோர் போதையில் எதற்காக தகராறு செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் தூயமணி இருவரும் முருகன், குறளரசன், நவீன்குமார், மாணிக்கம் உள்ளிட்ட நான்கு பேரையும் கை, முகம் என்று கிடைத்த இடமெல்லாம் கடித்துள்ளனர். கடித்த வேகத்தில் சுப்பிரமணிக்கு இரண்டு பல் உடைந்து விழுந்து விட்டது. காயம்பட்டவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தகவல் அறிந்து சென்ற போச்சம்பள்ளி போலீசார் விசாரித்ததில், போதையில் தகராறில் ஈடுபட்டு நான்கு பேரையும் கடித்த சுப்பிரமணி, தூயமணியை கைது செய்து சிறையிலடைத்தனர்.