மத்தூர் அருகே இருவேறு இரு சக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்குமார் (27). ஜம்முகாஷ்மீரில் இராணுவீரராக பணியாற்றி வரும் இவர் ஒரு மாத விடுப்பில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தொகரப்பள்ளி சந்திப்பு சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் படுகாயமடைந்து, ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அதேபோல் மத்தூர் அடுத்த கூச்சூர் கிராமத்தில் இன்று காலை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பர்கூர் அருகேயுள்ள பட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அர்சுணன் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர் வாகனத்தில் வந்த குட்டூர் கிராமத்தை சேர்ந்த தென்னரசு (48) படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாடரஹள்ளி-பர்கூர் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை பலகை, ஒளிரும் எச்சரிக்கை பதாகைகள் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இவ்விரு சம்பவங்களையும் மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.